புதுடெல்லி: இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நீர் மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து இலக்கை தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இவை ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிவேகமாக செல்லக்கூடியவையாகும். இந்தியா பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதியும் செய்து வருகிறது. அந்த வகையில், இந்திய கடற்படை நேற்று மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ஒன்றை ஐஎன்எஸ் மர்மகோவா போர் கப்பலில் இருந்து கடலில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது.
இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது. இது குறித்து கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “இந்த கப்பல் மற்றும் ஏவுகணை இரண்டும் உள்நாட்டிலேயே தயாரானது தற்சார்பு இந்தியாவுக்கு அடையாளமாக விளங்குகிறது. இதன் மூலம் கடலில் இந்திய கடற்படையின் வலிமை அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.