இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரம் அடைந்த போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன. முந்தை நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 84,266 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நேற்று வர்த்தகம் துவங்கியபோதே 83,002 புள்ளிகளில் சரிவுடன் துவங்கியது. அதிகபட்சமாக 82,434 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது. நாள் முழுவதும் சரிவுடனேயே நீடித்தது.

வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 2.1 சதவீதம், அதாவது 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளானது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்த கடும் சரிவால், மும்பை பங்குச்சந்தையில் ரூ.4,74,86,464 கோடியாக இருந்த பங்குகளின் மதிப்பு, ரூ.9,78,778 கோடி சரிந்து ரூ.4,65,07,685 கோடியானது. இதுபோல், கடந்த செப்டம்பர் 30ம் தேதியிலும் பங்குகளின் மதிப்பு ரூ.3,57,885 கோடி வீழ்ச்சி அடைந்தது. அதாவது 3 நாட்களிலேயே பங்குகளின் மதிப்பு ரூ.13,36,664 கோடி சரிந்ததுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஒரு புறம் இருக்க, சீனாவில் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்ததால், இந்தியாவுக்கு வர வேண்டிய வெளிநாட்டு பங்கு முதலீடுகள் சீனாவுக்கு திரும்பியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை