டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது. இந்திய வீரர்கள் உலக கோப்பையுடன் நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் சூறாவளி, புயல், கனமழை என சுழற்றி அடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக கடந்த 3 நாட்களாக வெஸ்ட் இண்டீசிலேயே தங்கியிருந்த இந்திய அணியினர், நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் தாயகம் புறப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை 11 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பிரதமரை சந்தித்து வாழ்த்து பெறுகிறது.
பிரதமரை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாலை மும்பை செல்ல உள்ளனர். உலகக்கோப்பையுடன் இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பேரணியாக செல்கிறது. உலகக்கோப்பையுடன் மெரைன் டிரைவில் இருந்து மும்பை வான்கடே மைதானத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணி செல்கின்றனர். வான்கடே ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.