Saturday, October 5, 2024
Home » இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

by Mahaprabhu

சென்னை: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய விமானப்படை தினத்தன்று விமான சாகச நிகழ்ச்சி பொதுவாக டெல்லியில்தான் நடைபெறும். இதை நாட்டு மக்கள் அனைவரும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 ஆண்டுகளாக டெல்லிக்கு வெளியே நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை காலை 11 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

இந்த சாகச விமானங்கள் தாம்பரம் விமான படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தவுள்ளன. இதில் சுகோய் சு 30, ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்ட 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சாகச நிகழ்ச்சியை காண மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ளனர். சுமார் 6500 போலீசார் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்தலாம்.

* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை பயன்படுத்தலாம்.

* பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லலாம். அண்ணா சிலையிலிருந்து மாநகர பஸ்கள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்ல வேண்டும்.

* கிரீன்வேஸ் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே.சாலை அண்ணாசாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

* காமராஜர் சாலையில் கடற்கரை சாலை விஐபி- விவிஐபி கார் பார்க்கிங், பிரசிடென்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம். சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலை பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்) ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

* ஆர்.கே.சாலையில் எம்ஆர்டிஎஸ்- லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), ராணி மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தர வேண்டும். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்தலாம். எம்டிசி சிற்றுந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சாலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட உள்ளனர். இதனால் பொதுப்பணித்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், முழுவதும் ஏசி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

9 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi