விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது: கேரள முதல்வர் பெருமிதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததின் மூலம் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று இந்த துறைமுகத்திற்கு வந்த முதல் கப்பலுக்கு நடந்த வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.8,677 கோடி மதிப்பில் வர்த்தக துறைமுகத்திற்கான முதல் கட்டப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. அதானி குழுமத்துடன் இணைந்து கேரளா மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு நேற்று சீனாவில் இருந்து 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் சான் பெர்னாண்டோ என்ற முதல் சரக்கு கப்பல் வந்தது. இதில் வந்த 1930 கன்டெய்னர்கள் நேற்று துறைமுகத்தில் இறக்கப்பட்டன.

இந்தக் கப்பலுக்கான வரவேற்பு விழா இன்று விழிஞ்ஞம் துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததின் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் இடம்பிடித்து உள்ளது. கேரள மக்களின் நீண்ட கால கனவு தற்போது நிறைவேறி உள்ளது. துறைமுகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற துறைமுகங்கள் உலகிலேயே மிகவும் குறைவாகவே உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு? ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது