இந்தியாவில் 2050க்குள் முதியோர் மக்கள் தொகை இரட்டிப்பாக உயரும்: ஐநா அதிகாரி தகவல்

புதுடெல்லி: வரும் 2050க்குள் இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் எனவே, முதியவர்களின் நலன்களுக்கான சுகாதாரம், வீட்டு வசதி திட்டங்களில் அதிக முதலீடு அவசியம் என்று ஐநா அதிகாரி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா வோஜ்னார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இளைஞர்கள் எண்ணிக்கை, வயதானவர்கள் அதிகரிப்பு,நகர்ப்புற மயமாக்கல்,புலம் பெயர்வு, பருவநிலை மாற்றம் போன்ற ஒவ்வொரு பிரச்னைகளும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன.

வரும் 2050க்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 34.60 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுகாதாரம்,வீட்டு வசதி, ஓய்வூதிய திட்டங்களில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. குறிப்பாக வறுமையில் தனியாக வாழும் மூதாட்டிகள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மேலும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 25 கோடி இளம் மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா.

எனவே, சுகாதாரம், கல்வி, வேலைக்கான பயிற்சிகள்,புதிய பணிகள் உருவாக்குதலில் முதலீடு செய்வதன் மூலம் இளம் வயதினரின் திறன்களை பயன்படுத்தி நாட்டை நிலையான முன்னேற்றத்தை நோக்கி செலுத்த முடியும். வரும் 2050க்குள் இந்தியாவின் 50 சதவீத பகுதிகள் நகர்ப்புறமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் நகரங்கள், வலுவான உள்கட்டமைப்புகள்,மலிவு விலையிலான வீடுகள் கட்டுவது முக்கியமானதாகும்’’ என்றார்.

* மலட்டுத்தன்மை அதிகரிப்பு

வரும் 25ம் தேதி செயற்கை முறையிலான கருத்தரித்தல் உலக தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மிகவும் புகழ்பெற்ற இந்திரா ஐவிஎப் மருத்துவமனை தலைவர் அஜய் முர்தியா கூறும்போது,‘‘அதிகரித்து வரும் பொருள் பயன்பாடு, மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது. இது இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை அச்சுறுத்துவதோடு நாட்டின் மக்கள்தொகையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய தரவுகளின்படி இந்தியாவில் 2 கோடி 75 லட்சத்துக்கும் மேலான தம்பதியர் கருவுறுதலுக்காக முயற்சி செய்கிறார்கள். இது அமைதியான தொற்றுநோய். இது ஆறு ஜோடிகளில் ஒருவரை பாதிக்கும். எதிர்கால சமூக அமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.

 

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்