ஒட்டாவா: கனடா – இந்தியா இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகும் என்று இரு நாட்டு தலைவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் காலீஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்திய காலீஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் இந்தியாவின் சூழ்ச்சி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டி இருந்த நிலையில், நேற்று நிஜாரின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய துணை தூதரகம் விமான வெடிகுண்டு தாக்குதலில் பலியான 329பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடைபெறும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை வழக்கில் இரு நாடுகள் இடையே மறைமுகமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வாரம் கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் மோடி சந்தித்து இருந்தது இணக்கமான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.