ஹர்தா: இந்தியா கூட்டணியில் ஒரு வருடம், ஒரு பிரதமர் என்ற சூத்திரத்தைப் பற்றி சிந்தித்து வருகிறார்கள். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஏற்பாட்டை உலகம் கேலி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஹர்தா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபேசியதாவது: பா.ஜ கூட்டணியில் தலைமைப்பதவியில் எந்தவித பிரச்னையும் இல்லை. இந்தியா கூட்டணியில் அது இல்லை. இந்தியா கூட்டணித் தலைவர்கள் யாரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க விரும்புகிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜவில் அது மோடிதான் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அவர்களின் நிலை என்ன?. ஒரு வருடம், ஒரு பிரதமர் சூத்திரம் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களிடையே விவாதம் நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
அதாவது ஒரு வருடத்தில் ஒரு பிரதமர், இரண்டாவது ஆண்டில் இரண்டாவது பிரதமர், மூன்றாவது ஆண்டில் மூன்றாவது பிரதமர், நான்காவது வருடத்தில் நான்காவது பிரதமர். ஐந்தாவது ஆண்டில் ஐந்தாவது பிரதமர். பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இதேபோல் பகல் கனவு காணும் இந்த தலைவர்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற சூத்திரத்திற்கு வாக்காளர்கள் தயாரா. எதிர்க்கட்சிக் கூட்டணியின் அபாயகரமான விளையாட்டாக இது உள்ளது. இவ்வாறு பேசினார்.