சென்னை: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர். நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மா.பா.அன்பு துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றி வைத்து சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமார், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், அடையார் துரை, முத்தழகன், டெல்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய கொடியேற்றிவைத்து மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகள் வழங்கினார். தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தேசிய கொடியை ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை ஆழ்வார்பேட்டை தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
இதில், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், அசோகன், சக்தி வடிவேல், மாநில பொதுச் செயலாளர் ஜவஹர் பாபு, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ, முனவர் பாஷா, மகளிர் அணி தலைவி ராமகிருஷ்ணன், கல்யாணி, உமா, வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, மயிலை சண்முகவேல், சைதை நாகராஜ், தி.நகர் கோதண்டன், மயிலை எஸ்.எம் வேதா, டைல்ஸ் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே.சிவா, பா.கருணாநிதி, கு.வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் டி. மகாலிங்கம், வர்த்தகரணி செயலாளர் ஜி.கே.பெருமாள், மாநில மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.கிஷோர் உள்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஏ.ேக.கரீம், ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய ஹஜ் அசோசியேசன் அலுவலகத்தில் அதன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதே போல பல்வேறு இடங்களில் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.