78வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார், கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார்

சென்னை: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. 78வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றி வைத்ததும், விழா மேடையில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார். இந்த விழாவுக்கு வரும், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், எல்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இரவு-பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளது. சுதந்திர தினவிழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது, வெள்ளை நிற போலீஸ் திறந்த ஜீப்பில் ஒருவரை நிறுத்தி அணிவகுப்புகளை பார்வையிடுவது, குதிரைப்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியை ஏற்றுவது, கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது என பல ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.

* சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பஸ்நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க தடை: சுற்றுச்சூழல் அமைச்சர் அறிக்கை

பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

கோவை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சோதனை