ஹனோய்: வியட்நாமில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் இறுதிவரை ஒரு வாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்தாண்டு இதே காலத்தை விட 3 மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள்.
மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காரணமாக வியட்நாமில் இந்தாண்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.