மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 1,537 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 99.79 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 98.93 அடியானது. நீர்இருப்பு 63.46 டிஎம்சியாக உள்ளது.