மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2வது நாளாக நேற்றும் 16 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்குவதற்கு 7வது நாளாக தடை நீடிக்கிறது.
இதேபோல், ேமட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 13,638 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 14,159 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 10ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 55.14 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 55.64 அடியானது. நீர் இருப்பு 21.54 டிஎம்சியாக உள்ளது.