திருமலை: அமராவதி என்ற பெயரில் ரூ.118 கோடி பெற்றதாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று திருப்பதியில் அமைச்சர் ரோஜா கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது: அமராவதி தலைநகர் திட்டம் என்ற பெயரில் சப் கான்ட்ராக்ட் வழங்கி ரூ.118 கோடி கணக்கில் வராமல் முறைகேடு செய்திருப்பதாக சந்திரபாபுவிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது இந்த நோட்டீஸ் குறித்து யாரும் பேச மறுக்கின்றனர். மாநில அரசு சார்பில் எந்தவித புகார் வழங்கப்படாமல் வருமானவரித்துறை அதிகாரிகளே தானாக முன்வந்து வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சப் கான்ட்ராக்ட் வழங்கி சந்திரபாபு கையெழுத்து போட்டால் அவர்கள் கொடுக்கும் பணத்துடன் கூடிய சூட்கேசை லோகேஷ் பெறுவார். அவரது மனைவி புவனேஸ்வரி அதனை எண்ணி வைத்து கொள்வார். இதுகுறித்து சந்திரபாபு அவரது லோகேஷ் மீது சிபிஐ மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். அமராவதி என்ற பெயரில் ரூ.600 கோடிக்கு மேல் மோசடி செய்து ஐதராபாத்தில் சந்திரபாபு வீட்டை கட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.