வெண்பன்றிகளைப் பொருத்த வரையில் 9 அல்லது 10வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இந்த நேரத்தில் பன்றிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சிறிது நாள் கழித்து இனப்பெருக்கத்திற்கு விடுவது நல்லது. சினை பிடித்த பன்றிகளை தனித்தனி ஷெட்டில் வைத்து வளர்த்து வருகிறோம். ஒரே ஷெட்டில் சினை பிடித்த பன்றிகளை வைத்து வளர்த்தால் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும். இதனால் வயிற்றில் குட்டிகள் தங்காமல் போகக்கூடும். இனப்பெருக்கம் நடைபெற்ற நாளில் இருந்து 113 அல்லது 114வது நாளில் தாய்ப் பன்றிகள் குட்டி ஈனும். இதன்மூலம் வருடத்திற்கு 20 வெண்பன்றி குட்டிகள் கிடைக்கும். தாய்ப் பன்றிகள் குட்டி ஈன்ற அடுத்த 30வது நாளிலேயே மீண்டும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். 3 மாதங்கள் கழித்து இனப்பெருக்கம் செய்தால் ஆரோக்கியமான குட்டிகளைப் பெறலாம்.இனப்பெருக்கப் பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ள குட்டிகளுக்கு கண்டிப்பாக அடர் தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இறைச்சிக்கான பன்றி எனில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், மாணவர் விடுதிகளில் கிடைக்கும் உணவுக் கழிவுகள், இலைகளை சேகரித்து கொடுக்கலாம். பண்ணையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவுக்குள் அவ்வாறு தினமும் உணவுக் கழிவுகள் நிச்சயம் கிடைக்கும் என்றால் மட்டுமே இறைச்சிக்கான பன்றிப் பண்ணையில் லாபம் ஈட்ட முடியும்.