குடகு: குடகு மாவட்டத்தில் பெய்து வரும் நிரந்தர மழையால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட ஓட்டல், வீடுகள் அபாய கட்டத்தில் உள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கீழ்ப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த தடுப்பு சுவர் அப்புறப்படுத்தப்பட்டது. இப்போது அந்த இடத்தில் உள்ள மண் சரிந்து வருகிறது. மண் சரிந்ததை தொடர்நது ஊழியர்கள் அதை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும், மழை நீர் உள்ளே செல்லாதவாறு தார்பாயை போர்த்தியுள்ளனர். ஆனால், கனமழை பெய்து வருவதால் கீழ்ப்பகுதியில் சிறிது, சிறிதாக மண் சரிந்து வருகிறது. ஒருவேளை பெரிய அளவில் மண் சரிந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. தற்போது தடுப்பு சுவரை அப்புறப்படுத்தியது தான் மண் சரிவுக்கு காரணம் என கிராமத்தினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஒருவேளை மண் சரிந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் சேர்ந்து கீழே உள்ள ஓட்டல், வீடுகள் சேதமடையும் என கூறப்படுகிறது.