புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார். இந்தியாவின் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மூன்றாவது ஆண்டு நேற்று தொடங்கிய நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி, குடியரசு தலைவர் எஸ்டேட்டில் அமைந்துள்ள ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒரு நாள் ஆசிரியையாக மாறினார்.
9ம் வகுப்புக்கு சென்ற அவர், அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய குடியரசு தலைவர், ‘‘இன்றைய குழந்தைகள் திறமையானவர்கள் என்பதால் உங்களுடன் பேச வேண்டும் என்று கடந்த பல நாட்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது” என்றார். தொடர்ந்து நீர் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களிடம் வலியுறுத்தினார். கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியாக அதிக மரங்களை நடவேண்டும் என்றும் மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.