உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அதாவது, இந்த நாளில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்ற தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் நடைபெறும் ‘பிரான் பிரதிஷ்டா’ (Pran Pratishtha) எனப்படும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சுமார் 6,000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ராமர் கோயிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பல மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜன. 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுமுறை அறிவித்துள்ளார் . மேலும் இதை ‘தேசிய விழா’ எனக் குறிப்பிட்டு அன்று மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார். இந்நிலையில் ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்து ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.