ஊத்தங்கரை: தகாத உறவை கண்டித்த மாமியாரை கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள், காதலனான கல்லூரி மாணவருடன் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கரியபெருமாள் வலசை சேர்ந்தவர் அலமேலு(48), கூலித் தொழிலாளி. இவரது 2வது மகன் ஏழுமலையின் மனைவி பவித்ரா(21). ஏழுமலை திருப்பூரில் தங்கி, அங்குள்ள கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால் அலமேலுவும், பவித்ராவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, அலமேலுவின் மூத்த மகன் சேட்டு, தாயாரை தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்ேபாது, பவித்ரா மட்டும் இருந்துள்ளார். அவரிடம் கேட்ட போது, gலையில் வெளியே சென்ற அலமேலு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார். தாயை தேடி சென்ற சேட்டு, அங்குள்ள தனியார் நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நேற்று முன்தினம் காலை, அலமேலுவுக்கும், பவித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில், பவித்ராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதலன் மணிகண்டன், அலமேலுவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பவித்ரா கூறினார். இதனையடுத்து, மணிகண்டனை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பவித்ராவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவரான மணிகண்டனுக்கும் (19) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதுதெரிந்து அலுமேலு, தகாத உறவை கைவிடும்படி, மருமகளை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் கைவிடவில்லை. நேற்று முன்தினம் காலையும், இதுதொடர்பாக மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மாலை 4.30 மணிக்கு ஆடு மேய்க்க சென்ற பவித்ரா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அலமேலு, மருமகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது, கரியபெருமாள் வலசையில் உள்ள தனியார் நிலத்தில், பவித்ராவும், மணிகண்டனும் நெருக்கமாக இருந்ததை பார்த்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பயந்து போன பவித்ரா, அங்கிருந்து தனது வீட்டுக்கு ஓடிச்சென்று விட்டார். பின்னர், மணிகண்டன், டூவீலரில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து வந்து, அலமேலுவின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மணிகண்டனையும், பவித்ராவையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை கொன்று எரித்த வழக்கில் மருமகளும், கல்லூரி மாணவரும் கைதான விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* தந்தையை கார் ஏற்றி கொன்ற மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியை அடுத்த ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவர் மகன் சின்னத்துரைக்கு (42) தெரியாமல் 2 ஏக்கர் நிலத்தை சில மாதங்களுக்கு முன் ரூ.24 லட்சத்திற்கு விற்று, பணத்தை தனது வங்கி கணக்கிலேயே வைத்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த சின்னத்துரை, தந்தை கருப்பசாமியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி நேற்று காலை 7 மணியளவில் சவலாப்பேரி செல்லும் ரோடு வழியாக தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே காரில் வந்த சின்னத்துரை, கருப்பசாமி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி மருத்துவமனையில் உயரிழந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சின்னத்துரையை கைது செய்தனர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.