Friday, July 5, 2024
Home » மோடி ஆட்சியில் ரூ.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ஏப்பம் விட்ட பெருநிறுவன தொழிலதிபர்கள்

மோடி ஆட்சியில் ரூ.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ஏப்பம் விட்ட பெருநிறுவன தொழிலதிபர்கள்

by Dhanush Kumar

* நாடாளுமன்றத்தில் சொன்னது ஒன்று… நடந்தது வேறொன்று…

* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஒன்றிய பாஜ ஆட்சியின் வராக்கடன் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராட். ‘‘2014-15 நிதியாண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை ரூ.14,56,226 கோடி வராக்கடன் உள்ளது’’ என பதிலளித்தார். ரூ.14 லட்சம் கோடியா என அதிர்ச்சியில் மலைத்துப்போன மக்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமீபத்தில் வெளியான வராக்கடன் விவரம் அடுத்த இடியாக இறங்கியுள்ளது. அதாவது, கடந்த 2014-15 நிதியாண்டு தொடங்கி, மோடி ஆட்சியில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் புள்ளி விவரங்களை வெளியிட்டு சில மாதங்களிலேயே அதை விட கூடுதலாக ரூ.10 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக வெளியான தகவல் யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றுதான்.

அதேநேரத்தில், பெருநிறுவன முதலாளிகளுக்கு கடன் தொகையை ஒன்றிய பாஜ அரசு வாரி வழங்குவதும், அவர்களில் பலர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகி விடுவதும் பழகிப்போன செய்தியாகி விட்டது. வங்கிகளின் நிதி நிலை வராக்கடன் காரணமாக பெரிய அளவில் பாதிப்படைகிறது. இந்த வரிசையில் கிங் பிஷர்ஸ் விஜய் மல்லையா, கீதாஞ்சலி ஜெம்ஸ் மெகுல் சோக்ஷி, விஸ்டம் டயமண்ட்ஸ் ஜதின் மேத்தா, ஏபிஜி ஷிப்யார்ட் ரிஷி கமலேஷ் அகர்வால் உட்பட பெரிய முதலாளிகள் மட்டும் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை. திருப்பிச் செலுத்தும் வசதியிருந்தும் வேண்டுமென்றே ஏமாற்றி விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் வராக்கடன் ரூ.8,738 கோடியாக உள்ளது. இந்த கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அப்போது கடன் தள்ளுபடி குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இவை கடன் தள்ளுபடி அல்ல தள்ளி வைப்பு’’ என புது விளக்கம் அளித்தார். அதாவது, நிலுவைப் பட்டியலில் இருந்து இந்த கடன் நிலுவை தொகை எடுக்கப்பட்டிருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கைதான் எனவும், சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழிகளிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார்.

இப்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2.09 லட்சம் கடன் தொகை ‘தள்ளுபடி’ செய்யப்பட்டதாக சில மாதங்கள் முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, 2014-15 நிதியாண்டு முதல் ஒன்றிய பாஜ ஆட்சிக் காலத்தில் மொத்தம் ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சூரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சஞ்சய் ஈழவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 ஆண்டுகளில் வங்கிகளில் ரூ.25 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி ரூ.10.41 லட்சம் கோடி மற்றும் ஷெட்யூல்டு வங்கி கடன்கள் சுமார் ரூ.14.53 லட்சம் கோடி அடங்கும். அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.72 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த வராக்கடன் புள்ளி விவரத்துக்கும், ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்த பதிலுக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது. இதனால், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வராக்கடன் விவரங்களை மறைத்து வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

ஒன்றிய அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட மற்றொரு புள்ளி விவரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி எனவும், 2012-13 நிதியாண்டு முதல் கடந்த நிதியாண்டு கணக்கிடும்போது மொத்தம் ரூ.15.31 லட்சம் கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி, ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் வேறாகவும், அரசு வெளியிட்ட புள்ளி விவரம் வேறாகவும் உள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கல்விக் கடன் வாங்கும் அப்பாவிகள், சாகுபடி செய்ய கடன் வாங்கும் ஏழை விவசாயிகளிடம் கடன் தொகை கெடுபிடியாக வசூலிக்கப்படுவதாகவும், மோசடி செய்யும், பணம் இருந்தும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் பெரிய நிறுவன முதலாளிகளுக்கு வங்கிகள் தாராளம் காட்டுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுபோல், ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல லட்சம் கோடி வராக்கடன் ‘தள்ளி வைப்பு’ என்ற பெயரில் தள்ளுபடி செய்து வருவது சாமானிய மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* தள்ளிவச்சது படு தாராளம் திரும்ப வருவது சொற்பம்

பெருநிறுவன முதலாளிகளுக்கு கடன் வழங்கும் வங்கிகள், அவற்றை ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என வராக்கடன்களை ‘தள்ளி’ வைக்கின்றன. அவற்றை தொடர்ந்து வசூலிக்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபடும் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரூ.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடியில் வசூலித்தது சுமார் ரூ.2.5 லட்சம் கோடி, அதாவது 10 சதவீதம்தான் வசூலானதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வசூலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால், இவற்றை தள்ளிவைப்பு என்பதை விட தள்ளுபடி என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும். வங்கிகள் வராக்கடனை வசூலிக்க மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒன்றும் மிஞ்சாது என, வங்கியாளர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

* மோசடியாளர்கள் ரூ.87,295 கோடி

கடந்த மார்ச் 31ம் தேதிப்படி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. டாப் 50 மோசடியாளர்கள் ஏமாற்றிய கடன் தொகை ரூ.87,295 கோடி. இந்த மோசடி தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருப்பது, மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்தான். இந்த நிறுவனம் ரூ.8,738 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெம் சிங் பரானாவின் எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.5,750 கோடி மோசடி செய்துள்ளது. அடுத்த இடங்களில், ரெய் அக்ரோ (சந்தீப் மற்றும் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா சகோதரர்கள்) ரூ.5,148 கோடி, கான்காஸ்ட் ஸ்டீல் பவர் ரூ.3,911கோடி, ஏபிஜி ஷிப் யார்டு (ரிஷி அகர்வால்)
ரூ. 4,774 கோடி, ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் ரூ.3,311 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் (ஜதின் மேத்தா) ரூ.2,846 கோடி, ரோட்டோமேக் குேளாபல் (விக்ரம் கோத்தாரி) ரூ.2,894 கோடி, கோஸ்டல் பிராஜக்ட்ஸ் ரூ.2,311 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,066 கோடி மோசடி செய்துள்ளனர்.

* விதிகளில் மாற்றம் கைகொடுக்குமா?

பொதுவாக, வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், வட்டியையும் அசல் தொகையையும் தவணை முறையில் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து 90 நாட்கள் அசல் அல்லது வட்டித்தொகை செலுத்தாவிட்டால் அவை வராக்கடன் என்று வரையறை செய்யப்பட்டு விடுகின்றன. வராக்கடன் சுமையை குறைக்க வங்கிகள் இவ்வாறு முடிவு செய்வதாக வங்கியாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் வராக்கடனாக அறிவிக்கப்படுவதால், கடன் வாங்கியவர்கள் அதற்கான வட்டியை செலுத்தும் பொறுப்பு இல்லாமல் போய்விடுகிறது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வராக்கடன் விதிகளில் ரிசர்வ் வங்கி சில மாற்றங்கள் செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அதில், வராக்கடனாகி 6 மாதங்களுக்குள் வங்கிகள் அவர்களை ‘வேண்டுமென்றே கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள்’ பட்டியலில் வைத்து அறிவிக்க வேண்டும்.கடன் செலுத்த தவறியவர்கள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் தர வேண்டும். ஓராண்டு வரை புதிய கடன் எதுவும் வழங்கப்பட கூடாது என தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi