Sunday, June 30, 2024
Home » பொறுப்பை எடுத்து செய்து முடிக்கும் பழக்கம் கொண்ட பும்ராவை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது முக்கியம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

பொறுப்பை எடுத்து செய்து முடிக்கும் பழக்கம் கொண்ட பும்ராவை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது முக்கியம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

by Francis

பிரிட்ஜ்டவுன்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிட்ஜ்டவுனில் நேற்றிரவு நடந்த போட்டியில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 28 பந்தில், 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 53, ஹர்திக் பாண்டியா 32, கோஹ்லி 24, ரிஷப் பன்ட் 20 ரன் அடித்தனர். ஆப்கன் பவுலிங்கில் கேப்டன் ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 134 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அஸ்மத்துல்லா உமர்சாய் 26, நஜிபுல்லா சத்ரன் 19
ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தனர். சூர்யகுமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: கடந்த 2 ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சில டி20 போட்டியில் ஆடி இருக்கிறோம். அதனால் முன்கூட்டியே எங்களால் திட்டமிட முடிந்தது. 181 ரன் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்த பேட்டிங்கை பாராட்ட வேண்டும். ஏனென்றால் 181 ரன் இருக்கும் போது அனுபவம் வாய்ந்த எங்கள் பவுலிங் யூனிட்டால் என்ன செய்ய முடியும் என்று நன்றாக தெரியும். சூர்யகுமார், பாண்டியா பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. பும்ராவால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரியும். அவரை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம். இந்திய அணியில் பொறுப்பை எடுத்து கொண்டு செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவர் அவர் தான். எந்த சூழலில் விளையாடினாலும், பும்ரா தான் வீரராக பொறுப்பை தன் மீது ஏற்றிக் கொள்வார். இன்றைய ஆட்டத்தில் 3 வேகப்பந்து, 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம்.

அது சூழலையும், பிட்சையும், எதிரணியை கணித்தே செய்யப்பட்ட மாற்றங்கள். இந்த பிட்சில் ஸ்பின்னர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தோம். அதனால் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம். அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்புள்ளது, என்றார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில் “இந்த ஆடுகளத்தில் 180 ரன் எடுக்கக்கூடியதாக தெரிந்தது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் வென்று இருக்க முடியும். இப்படியான போட்டிகளுக்கு முக்கிய தேவை சரியான மனநிலைதான். நாங்கள் விளையாடிய எல்லா இடங்களிலும் ரசித்து விளையாடினோம். கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பயன்படுத்தி விளையாடுவோம்” என்றார்.

 

You may also like

Leave a Comment

nineteen − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi