சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றிட தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்களிடம் இது தொடர்பான கருத்துகளை பெற்றும், பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் மாணவர்களிடையே சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்கான கருத்துகளை பரிந்துரைகளாக இந்த குழு தயாரித்து அதனை முறைப்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது.
கல்வி நிலையங்களிலும், மற்ற பிற இடங்களிலும் சாதிகளின் பெயரால் பகை ஏற்பட்டு அதன் விளைவாக வன்முறை சம்பவங்கள் நடந்து கலவர பூமியாக தமிழ்நாடு மாறிவிடாமல் தடுப்பதற்கான நல்ல முயற்சியாக இந்த குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளதை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.