சென்னை: சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்தபோதுதான் 2021ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) அதிமுக ஆதரவு அளித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. தற்போது பாஜவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் கூறி வருகிறார். அவர், கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம் என்று கூறி வருகிறார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது: சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டால் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின்போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம். அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.