மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிகளை பெறாமல் இந்த பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 2,709 இறால் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2,227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சட்டவிரோதமாக செயல்பட்ட 134 இறால் பண்ணைகளை மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.