வீடியோவில் வைகோ பேசியிருப்பதாவது: சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7000 கி.மீ நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. 4 நாளுக்கு முன்னர் நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில், தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல், பக்கத்தில் உள்ள திண்ணையில் ஏறியதால் இடறி விழுந்து இடது தோள்பட்டை கின்னம் கீழே இறங்கி விட்டது. அதோடு எலும்பும் 2.செ.மீ அளவு உடைந்து விட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக் கூடியவன் வைகோ என்பதை கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இந்த தமிழ்நாட்டில் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கும் இந்த வைகோ முழு நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு திரும்ப வருவேன்.
அறுவை சிகிச்சை முடிந்தது: இதனிடையே மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார். இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்ததால் டைட்டானியம் பிளேட் பொருத்தியுள்ளனர். 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வைகோ இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். மேலும் ஒரு வார காலத்திற்கு பார்வையாளர்கள் யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.