சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டு மற்றும் ரூ.41 கோடியே 90 லட்சத்தை அமலாக்கத் துறை முடக்கியது. இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகை விரைவில் எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படும் எனவும், அதன்பின், இந்த வழக்கு சென்னை எம்.பி,எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.