சென்னை : சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தனியார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி வளாகத்திற்குள் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு மாணவர்களை விட செல்லும் பெற்றோர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து ஐஐடியின் வேளச்சேரி நுழைவுவாயில் முன்பாக திரண்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களை விடுவதற்கோ அழைத்து செல்வதற்கோ பெற்றோர் வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர் 20 கிமீ வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஐஐடி நிர்வாகத்தின் புதிய விதிகளுக்கு பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து வேளச்சேரி நுழைவு வாயில் முன்பு, புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிகளை திரும்பப்பெறுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.