கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ‘மை வி 3 ஆட்ஸ்’ என்ற ஆன்லைன் நிறுவனம் விளம்பரம் பார்த்தாலே பணம் சம்பாதிக்கலாம் என கூறி உறுப்பினர்களை சேர்த்து, அரசு அனுமதியின்றி ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்து மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த சத்ய ஆனந்தன் (36) தனக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். இதனால் அவருக்கு ஆதரவாக முதலீட்டாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் கோவையில் கூடினர். இந்நிலையில், சட்ட விரோதமாக அனுமதியின்றி பெரும் கூட்டத்தை கூட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் சத்ய ஆனந்தன் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.