சென்னை: சாதி பார்த்து அரசியல் செய்யக்கூடிய நபர் நானில்லை, அப்படி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகி இருக்க மாட்டேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் சசிகலா பேசியதாவது: ஆளுநருடன் மோதல் போக்கை அரசு கைவிட்டு விட்டு மக்களுக்காக நல்லதை செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். மக்கள் பிரச்னைகளை எடுத்து சொல்ல எதிர்க்கட்சியினர் தவறிவிட்டனர். சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் நடத்தினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. மேலும், கொடநாடு விவகாரத்தை தேர்தலுக்கு தேர்தல் திமுக பயன்படுத்துகிறது. இதில், விசாரணை மட்டுமே நடைபெறுகிறது.
ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதேபோல, சட்டமன்றத்தில் இருக்கைக்காக அதிமுக சண்டையிடுவது சரியான முறை அல்ல. உட்கட்சி பிரச்னையால் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ஜெயலலிதா இருந்த காலகட்டம் போல சட்டசபை தற்போது இல்லை. தியேட்டருக்கு செல்வது போல் சட்டசபைக்கு செல்கின்றனர். மேலும், நான் சாதி பார்த்து அரசியல் செய்யக்கூடிய நபர் இல்லை. சாதி பார்த்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகி இருக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவினர் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.