சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழ்நாடு அரசு உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விளக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது காவல்துறை பாதுகாப்பு பெற முடியும் என்ற உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு (28.04.2023) இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், பாதுகாப்பு ஆய்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழ்நாடு அரசு உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.