தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு நடத்த மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவருடைய கணவர் முகமது ரஹீம் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சிட்லபாக்கத்திலுள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் முகமது ரஹீமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக குடும்பத்தினர் நேரில் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குறிப்பிட்ட தனியார் மையத்தின் மருத்துவர்கள், ஊழியர்கள் தாக்கியதால்தான் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாகவும், அவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் முகமது ரஹீமின் மனைவி சையத் அலி பாத்திமா 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட மறுவாழ்வு மையம் எந்த அனுமதியுமின்றி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வலக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு