Wednesday, July 3, 2024
Home » IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்பெரும்பாலானோர் ஓர் இம்சையை அனுபவித்திருப்பார்கள். சாப்பிட்டவுடன் கழிவறையைத் தேடுவார்கள் சிலர். இம்சையான உணர்வு அல்லது மெல்லிய வயிற்றுவலியுடன் வயிற்றுப்போக்காக அல்லது மலச்சிக்கலாக உருவாகும் இந்த வாதை, சாப்பிட்டதும் மலம் கழித்தால்தான் நிம்மதியாக இருக்கவிடும். இது, எப்போதாவது ஒருமுறை என்றால் கவலைப்படத் தேவை இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட்டாலும் உடனடியாகக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலை பல நாட்களுக்குத் தொடர்ந்தால், இந்தப் பிரச்னை ஆக இருக்கலாம்… ‘இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்’ (ஐபிஎஸ்).‘மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறார்கள். சிலர், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என டாக்டர் பரிந்துரைத்தபடி வாழ்ந்து இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இந்தப் பிரச்னை இருந்தாலும், திடீரென பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாததால் பெரும்பாலானோர் மருத்துவரை நாடாமல், இந்த  அவஸ்தையோடு வாழப் பழகிக்கொள்கிறார்கள்.மன அழுத்தமற்ற வாழ்க்கைச்சூழலில் இருக்கும் வரை இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால், பணிச்சுமை, தனிப்பட்ட சிக்கல்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும் போது துவளச்செய்துவிடும். பணியிடம் உட்பட வேறு எங்கும் செல்லவிடாமல் வீட்டிலேயே முடக்கி, அன்றாட வேலைகளைக்கூட சரிவரச் செய்யவிடாமல்,  வாழ்வையே புரட்டிப்போடும் சிக்கலாக இந்த வலி மாறக்கூடும்.ஐபிஎஸ் ஏன் வருகிறது?இரைப்பை, பெருங்குடல் மற்றும் சிறுகுடல்களின் சீரான இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தடங்கல்களால் இந்தப்  பிரச்னை வருகிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் விரைந்து செயல்படுவதால் ‘ஐபிஎஸ்-டி’ (IBS-D) எனப்படும் வயிற்றுப்போக்கும், இயல்புக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதால் ‘ஐபிஎஸ்-சி’ (IBS-C) எனப்படும் மலச்சிக்கலும் வருகின்றன. செரிமானப் பாதைகளில் ஏற்படும் தொற்று, மூளைக்கும் செரிமான மண்டலத்துக்குமான தொடர்பில் குளறுபடி, மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் அறிகுறிகள்வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிலருக்குத் தொடர்ந்து சில நாட்களுக்கு மலச்சிக்கலும், பிறகு தொடர்ந்து சில நாட்களுக்கு வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படும்.எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்*இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் ஆபத்து இல்லாத தொந்தரவு மட்டுமே. பின்வரும் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்… அவசரம். ஆரம்பநிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்.*50 வயதுக்கு மேல் புதிதாக ஆரம்பித்த ஐபிஎஸ் வகை குடல் உபாதைகள் உடையவர்கள்.*எடை குறைப்பில் ஈடுபடாமல் தானாகவே உடல் எடை குறைபவர்கள்.*மலம் கழிக்கும்போது ரத்தம் கலந்து செல்லும் பிரச்னை உடையவர்கள்.*தூக்கத்தைக் கெடுத்து எழுப்பும் வயிற்றுப்போக்கு, வலி உபாதைகள் உடையவர்கள்.*குடல் புற்றுநோய் உள்ளவர்கள்… குறிப்பாக, 50 வயதுக்கு முன்பாகவே பாதிப்பு உடையவர்களின் நெருக்கமான குடும்ப உறவினர்கள்.*ரத்தசோகை உடையவர்கள்.நார்ச்சத்து மற்றும் ஆன்டிடயோரியல் மருந்துகள்பாதிக்கப்பட்டவரின் உடல்நிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உணவில் திடீரென நார்ச்சத்தை அதிகமாக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக நார்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து தப்பலாம். மலச்சிக்கல், வயிற்றுப்போக்குப் பிரச்னைகளுக்கான மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.ப்ரீபயாடிக்ஸ் (Prebiotics)‘ப்ரீபயாடிக்ஸ்’ என்பவை செரிமானமாகாத உணவு வகையைச் சார்ந்தவை. காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த முழுதானியங்கள், தண்ணீர்விட்டான் கிழங்கு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவைப் வளர்க்கின்றன. புரோபயோடிக்ஸ் மற்றும் ப்ரீபயோடிக்ஸ் இரண்டும் இணைந்து மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தரும்.ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics)சிறுகுடலில் உள்ள பாக்டீரியாவின் அதிக வளர்ச்சி காரணமாகவோ, குறிப்பிட்ட சில பாக்டீரியா காரணமாகவோ ஐபிஎஸ் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து பரிந்துரைக்கப்படும். இது, அளவுக்கு அதிகமான பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.உடற்பயிற்சிசைக்ளிங், ஜாகிங் போன்றவை ஐபிஎஸ் பிரச்னையைக் கணிசமாகக் குறைக்கின்றன. கொழுப்பைக் கரைப்பதோடு வயிற்றுத் தசைகளைச் சிறப்பாக செயல்படவைத்து, செரிமானப் பாதை வழியாக வாயுக்களைச் சீராக வெளியேற்றி, வயிற்றைப் பாதுகாக்கின்றன. தினசரி 20 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை உயர்த்தி, வாரத்துக்கு மூன்று முறையிலிருந்து ஐந்து முறையாகச் செய்யும்போது, குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.புரோபயாடிக்ஸ் (Probiotics)புரோபயாடிக்ஸ் இயற்கையான, நல்ல பாக்டீரியா உற்பத்தியைப் பெருக்கி வயிற்று மண்டலத்தின் (Gut flora) சமச்சீரான இயக்கத்துக்கு உதவுகின்றன. உணவு அல்லாத பிற புரோபயாடிக் சப்ளிமென்ட்டுகள் மூலமாக இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றியே பெருமபாலான ஆய்வுகள் நடந்துவருகின்றன. புரோபயோடிக் சப்ளிமென்ட் வயிற்று வலி மற்றும் குடல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உணவில் கவனம்உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரசாரமான மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். தேநீர், காபி குடிப்பதைத் தவிர்ப்பதோ, இயன்றவரை குறைத்துக்கொள்வதோ நல்லது.நமது உடலின் அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவையும் அதன் விளைவுகளையும் நுட்பமாகக் கவனித்துக் குறித்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், நம் உடலுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை விரைவில் கண்டறிந்து, கேடு விளைவிப்பவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுதலை பெறலாம்.அலர்ஜியால் வரும் ஐபிஎஸ்*சர்க்கரை நோய்க்கு பரிந்துரைக்கப்படும் ‘மெட்ஃபார்மின்’ (Metformin) என்கிற மருந்தை உட்கொள்ள ஆரம்பித்த பிறகு, ‘ஐபிஎஸ்’ அறிகுறிகள் தோன்றினால், மெட்ஃபார்மின் எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இதனால், ஐபிஎஸ் பிரச்னையும் குணமாகும்.*லேக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose intolerance) எனப்படும் பால் பொருட்கள் ஒவ்வாமை, பழங்கள் (ஃப்ரக்டோஸ்), கோதுமை (க்ளூடன்) எனக்  குறிப்பிட்ட உணவு செரியாமை இருந்தால், அந்த உணவுகளைத் தவிர்த்தால் நோய்க்குறிகள் மறைந்துபோகும்.*சிறுகுடலில் ‘ஜியார்டியா’ எனும் கிருமித் தொற்று ஆண்டுக்கணக்கில் ஐபிஸ் போல் இம்சை தரலாம். தகுந்த மருந்துகள் எடுப்பதன் மூலம் இதைச் சரிசெய்யலாம்.*கணையச் சுரப்பி குறைபாட்டாலும், பித்தப்பை அகற்றப்பட்டாலும் ஐபிஎஸ் பிரச்னை ஏற்படலாம். இவற்றைத் தக்க சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.தொகுப்பு : இளங்கோ கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

twelve + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi