இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.அப்போது, “வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ‘இன்னும் கணக்கு எடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். மீட்புப் பணிக்கு உதவுவதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளோம்.முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியும் கேரளத்துக்கு வழங்கியுள்ளோம். இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும்” என்றார்.