புதுடெல்லி: படிப்பு விடுப்பிலும் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மீறினால் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கு துறை சார்ந்த படிப்பிற்காக விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பு விடுப்பில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றுவதில்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘படிப்பு விடுப்பில் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் கட்டாயம் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற உறுதிமொழிக்கு இணங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.