திருமலை: ஐதராபாத்தில் ‘சாப்பிட்டதும் கிக் இருக்கும்’ என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்நிலையில் தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், ஐஸ்கிரீம்களில் விஸ்கி கலந்து ஸ்பெஷல் பிளேவர் என்று கூறி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் ஐஸ்கிரீம் பார்லரில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில் 60 கிராம் ஐஸ்கிரீமில் சுமார் 100 மில்லி விஸ்கி கலந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. பின்னர் 11.5 கிலோ விஸ்கி ஐஸ்கிரீம்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையாளர்களான தயாகர் ரெட்டி, ஷோபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்திருப்பதை மறைத்து மிகவும் ருசியானது. சாப்பிட்டவுடன் கிக் காக இருக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தது தெரியவந்தது.
இதனால் விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை களைக்கட்டியது. ஐஸ்கிரீம் சுவையாக இருந்ததால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தினமும் 4 முறை இந்த பார்லருக்கு வந்து வாங்கி சென்றனர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக ஐஸ்கிரீம் ஆர்டர்களைப் யாராவது பெறுகிறார்களா? எவ்வளவு காலமாக இந்தத் தொழிலை நடத்தி வருகிறார்கள்? அவர்களின் வழக்கமான வாடிக்கையாளர்கள் யார்? நகரத்தில் வேறு எங்கு கிளைகள் உள்ளது? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.