திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் அமக்காடு கிராமத்தையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தமிழ்நாட்டின் கோவைக்கு சென்ற தனியார் ஸ்லீப்பர் கோச் சொகுசு பஸ்சை நிறுத்தினர். அதில் சந்தேகப்படும்படி இருந்த 4பேரிடம் இருந்த பைகளை சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் எதுவுமின்றி தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை இருந்தது.
தொடர்ந்து 4 பேரையும் பிடித்து விசாரித்தபோது ஆந்திர மாநிலம் நந்தியாலாவை சேர்ந்த அமர்பிரதாப்(25), கோவை சாவித்திரி நகரை சேர்ந்த வெங்கடேஷ்ராகுல், செந்தில்குமார், சேலத்தை சேர்ந்த சபரிராஜன் என தெரியவந்தது.
இவர்கள் வைத்திருந்த பைகளில், 4 கிலோ 232 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.1 கோடியே 84 லட்சத்து 53 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால், நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அதன்படி அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 59 லட்சத்து 8 ஆயிரத்து 300 என மதிப்பிடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.