திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12.45 மணிக்கு கோலாலம்பூருக்கு மலேஷியா ஏர்லைன்ஸ் எம்.எச்.199 விமானம் 138 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் நடுவானில் வலது இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. மேலும் விமானத்தில் இருந்து பயங்கர புகை வந்தது. இன்ஜினில் தீ பொறி வருவதை கவனித்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தோம் என நிம்மதி அடைந்தனர். பயணிகளை இறக்கிவிட்டு விமானத்தில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் போராடி அணைத்தனர்.