Monday, July 1, 2024
Home » குடிசையிலிருந்து ஒரு இளவரசி!

குடிசையிலிருந்து ஒரு இளவரசி!

by Porselvi

இணையத்தில் தனக்கென தனி அந்தஸ்துடன் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார் மலீஷா கர்வா. பிரபல ஸ்கின்கேர் பிராண்டான ‘ஃபாரஸ்ட் எஸென்சியல்ஸி’ன் ‘யுவதி செலக்‌ஷனி’ன் மாடல் இவர். இத்தனைக்கும் மலீஷாவுக்கு வயது 14. மட்டுமல்ல, மும்பையின் தாராவி குடிசைப் பகுதியிலிருந்து உலகின் முன்னணி நிறுவனத்துக்கு மலீஷா மாடலாகியிருப்பதுதான் அவர் வைரலாக முதன்மைக் காரணம். மும்பையின் முக்கியமான குடிசைப்பகுதி, தாராவி. அங்கே கடற்கரையோரத்தில் தார்ப்பாயினால் அமைக்கப்பட்ட வீட்டில் வாழ்ந்து வருகிறார் மலீஷா.

அப்பா, அம்மா, சகோதரன், தாத்தா, பாட்டி, மாமா என பெரிய குடும்பம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலீஷாவின் குடும்பத்துக்கு இரண்டு வேளை உணவு கிடைப்பதே பெரிய விஷயம். வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு அரசுப் பள்ளியில் படித்து வருகிறார் மலீஷா. அவருக்கு பத்து வயதிலிருந்தே நடனம் மற்றும் மாடலிங் செய்வதில் பேரார்வம்.மட்டுமல்ல, படிப்பிலும் ரொம்ப சுட்டி. மூன்று வருடங்களுக்கு முன்பு அமெரிக்க நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் ஒரு இசை வீடியோ எடுப்பதற்காக தாராவிக்கு வந்திருந்தார். அப்போதுதான் மலீஷாவின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. ராபர்ட்டின் உதவியால் புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளின் அட்டைப் படத்தில் இடம்பிடித்தார் மலீஷா. சிறுமியின் தனித்துவமான தோற்றமும், புன்னகையும் பல நிறுவனங்களைக் கவர்ந்தது.

அதில் ஒன்றுதான் ‘ஃபாரஸ்ட் எஸென்சியல்’. இதுபோக இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் மலீஷாவைத் தேடி வந்திருக்கின்றன. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலீஷா கார்வா. மலீஷா கர்வா-வை ராபர்ட் ஹாஃப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார். தனது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக ஒரு நல்ல வாழ்க்கையை உண்டாக்கிக் கொடுப்பதுதான் தனது லட்சியம் என்கிறார் மலீஷா கர்வா. ‘குடிசைப்பகுதியிலிருந்து ஒரு இளவரசி’ என்று அவரைப் புகழ்ந்து வருகின்றனர் இணையவாசிகள்.
– த.சக்திவேல்

You may also like

Leave a Comment

seven + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi