சென்னை: கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50% மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வீதம் ரூ.6 கோடியே 45 லட்சம் செலவில் நாட்டின கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படும்.
தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும், ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் விவசாயிகளின் 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப்பிராணிகளுக்கு ரூ.1 கோடியில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய் கடி நோய் தடுப்பூசி போடப்படும். கால்நடை நிறுவனங்களில் நவீன நோய் அறியும் கருவிகளை கையாளுவதற்கு என 400 கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.1 கோடியில் அளிக்கப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு விடுதி கட்டப்படும்.