சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கலுங்குவிளையை சேர்ந்தவர் பிரபாகர் பீம்சிங் (46). விவசாயத்துடன் பன்றி வளர்க்கும் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி ஆஷா (35). ரியான் பிரபாகரன் (12) என்ற மகன் உள்ளார். மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று காலை வெகு நேரமாகியும் வீடு பூட்டி கிடந்துள்ளது. இதனால் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது ஆஷா கழுத்தில் காயத்துடனும் பிரபாகர் விஷம் அருந்திய நிலையிலும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக நேற்று முன்தினம் இரவு பிரபாகருக்கும், ஆஷாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த பிரபாகர் மனைவியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விஷ மருந்தை எடுத்து வந்து குடித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. வீட்டின் அருகில் நின்ற கார் கதவை திறந்து பார்த்தபோது விஷமருந்து பாட்டில் மற்றும் அரிவாள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.