திருப்பூர்: திருப்பூர் அணைக்காடு பகுதியில் 7 வயது மகளை கொன்று கணவனும், மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை அணைக்காடு பகுதியில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்து அருகில் வசிப்பவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும், படுக்கை அறையில் 7 வயதான சிறுமியும், ஆணும் உயிரிழந்து உடல் உப்பிய நிலையில் அழுகிய நிலையில் கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த நாக சுரேஷ் (41), அவரது மனைவி விஜயலட்சுமி (35), மகள் முத்தீஸ்வரி (7) என தெரியவந்தது.
அணைக்காடு பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் குடியேறி வீட்டிற்கு அருகில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து சென்றனர். அன்று முதல் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதியும் விஷம அருந்தி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதே வீதியில் வசித்த ராஜபாளையத்தை சேர்ந்த சூரியமூர்த்தியும் நாக சுரேசும் நண்பர்கள். வீடு லீசுக்காக ரூ.5 லட்சத்தை சூரியமூர்த்தி முன்னிலையில் வீட்டு உரிமையாளரிடம் நாக சுரேஷ் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த சூரியமூர்த்தி தொழில் வளர்ச்சிக்காக நாகசுரேஷிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கடன் கொடுத்தது குறித்து அவரது மனைவி தனக்கு தெரியாது என கூறிவிட்டாராம். கடனாக கொடுத்த ரூ.5 லட்சம் திரும்ப கிடைக்காது என்ற விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
* உருக்கமான கடிதம்
தற்கொலை செய்துகொண்ட நாக சுரேஷின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், ‘‘நாங்களாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளோம். யாரும் காரணம் இல்லை. வீட்டில் நகைகள் சில உள்ளன. அதனை விற்று எங்கள் இறுதி சடங்கை செய்து விடுங்கள்’’ என எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.