தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(47). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பொன்னுருவி. 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளாக, சிவப்பிரகாசம் ஓசூரில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், நல்லம்பள்ளி தண்டுகாரம்பட்டியில் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், 12ம் நாள் காரியத்திற்காக சிவப்பிரகாசம் ஊருக்கு வந்திருந்தார். உறவினர் வீட்டின் அருகே, நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அதனை பார்க்க சென்றவர், நேற்று காலை அங்குள்ள புதருக்குள் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்துகிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சிவபிரகாசத்தை மர்ம நபர்கள் கடத்திச்சென்று இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்து, கத்தியால் குத்தி கொலை செய்து ஒரு கையில் கயிற்றை கட்டி, சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்று, புதரில் சடலத்தை வீசி விட்டு தப்பியது தெரியவந்தது. சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு அருகிலேயே கொலை நடந்திருப்பதால், அவரது மனைவி பொன்னுருவி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவரையும் சிலரையும் பிடித்து கள்ளக்காதல் விவகாரத்தில் சிவப்பிரகாசம் கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.