மனைவி இறந்ததால் மகனுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை

*சத்தியமங்கலம் அருகே பரிதாபம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே மனைவி இறந்ததால் வேதனையில் மகனுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி காடு பசுவன்மாளம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (68). இவரது மகன் ராம்குமார் (24). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னியப்பனின் மனைவி சரளம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் சென்னியப்பன் மற்றும் அவரது மகன் ராம்குமார் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிகாம் படித்த ராம்குமார் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இவர்களது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூரிலிருந்து கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதிக்கு குடி பெயர்ந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரளம்மாள் உயிரிழந்ததும் தெரியவந்தது. மனமுடைந்த சென்னியப்பன் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்