Sunday, September 29, 2024
Home » ஆரோக்கிய கூந்தலை எவ்வாறு பராமரிப்பது!

ஆரோக்கிய கூந்தலை எவ்வாறு பராமரிப்பது!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

மக்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று தலை முடி உதிர்வு. ஆண்களுக்கு மட்டுமில்லை, பெண்களும் இந்தப் பிரச்னையால் அவதிப்பட்டுதான் வருகிறார்கள்.
இதற்காக இயற்கை மருந்து, மருத்துவர்களின் ஆலோசனை மூலம் தீர்வு கிடைக்குமா என்றும் அதற்கான வழியினை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு முடி கொட்டும் பிரச்னை இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது? எவ்வளவு முடி கொட்டினால் முடி கொட்டும் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்? கொட்டிய முடி மீண்டும் நன்கு வளர என்ன செய்யலாம்? என பல கேள்விகள் குறித்து இதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

‘‘தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி. இந்த முறையை ஆனாஜென், கெடாஜென் மற்றும் டெலோஜென் என்று கூறுவார்கள். ஆனாஜென் என்பது, முடி வளரும் நிலை. கெடாஜென் என்பதில் முடி மேற்கொண்டு வளராது, விழவும் விழாது. ஆனால், டெலோஜென் என்ற கட்டத்தை அடையும் போது முடி உதிர்ந்துவிடும். இவ்வாறு உள்ள இந்த சுழற்சியில், ஒருவருக்கு ஒரு நாளுக்கு 100 முடிகள் வரை கொட்டலாம். ஆனால் அதற்கும் மேலாக, 150 முடிகளோ அல்லது நீங்கள் ஒவ்வொரு முறையும் வாரும் போது முடி உதிர்ந்தால், முடியின் மீது கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்.

சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முடி கொட்டும். உடலில் சத்துகள் சரியாக இல்லை என்றால் முடிகொட்டும். டைபாய்ட், ஜாண்டிஸ் மாதிரி நோய் வந்தவர்களுக்கு, நோய் தாக்கியபோது கொட்டாமல், முடி டெலோஜென் நிலையை அடைந்த பின்பு, அதாவது நோய் குணமான 1.5 மாதங்களில் கொட்டும். அத்தகைய நிலையில், பயப்பட எதுவுமில்லை. நிச்சயமாக முடி வளரும்” என்கின்றனர்.

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க உதவும் தினசரி முடி பராமரிப்பு வழக்கம் உங்கள் தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தைப் போலவே முக்கியமானது. முடி பராமரிப்பு என்பது ஒரு சில தரமான முடி தயாரிப்புகளை பயன்படுத்துவதால் மட்டுமில்லை. ஆரோக்கியமான கூந்தலை எவ்வாறு பராமரிப்பது, அதை அடைவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய தினசரி முடி பராமரிப்பு வழக்கத்தை பார்க்கலாம். உங்கள் தலைமுடியின் தரம் என்று வரும்போது உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை முக்கியப் பங்காற்றுவதால், விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கு நீங்கள் அவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

எண்ணெய் மசாஜ்

உங்கள் வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தில் முதலில் நீங்கள் சேர்க்க வேண்டியது எண்ணெய் மசாஜ். முடியினை ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கும் முன் பின்பற்ற வேண்டிய முறை. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை லேசாக சூடு செய்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் சேர்க்கும். உங்கள் தலைமுடியை எண்ணெயால் மசாஜ் செய்து, குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது ஒரே இரவில் விட்டுவிட்டு, மென்மையான ஷாம்பூவுடன் கழுவவும். உங்கள் தலைமுடி மென்மையாகவும், உடனடியாக பளபளப்பாகவும் இருக்கும்.

நீங்கள் பொடுகு பிரச்னைகளை எதிர்கொண்டால், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது தேயிலை மர எண்ணெயை சில துளிகள் சேர்த்து, உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
தலைமுடிக்கு எண்ணெய் தடவினால், முடி அதிக எண்ணெய் பசையாக மாறும் என்று பலர் நம்புகிறார்கள் ஆனால் இது உண்மையல்ல. எண்ணெய் மசாஜ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் எந்தவொரு சேதத்தையும் தடுக்க முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.

அப்படிப்பட்டவர்கள் ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் தடவி, பிறகு முழுவதுமாக அலசலாம். இது அவர்களின் தலைமுடிக்கு பொலிவை சேர்க்க உதவுவதோடு மட்டுமல்லாமல், எண்ணெய் பசையுள்ள கூந்தலைப் பற்றி அதிகம் கவலைப்படுவதையும் தடுக்கும்.

வறண்ட கூந்தல் எண்ணெய் மசாஜ்க்கு நன்கு பதிலளிக்கிறது. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் கூந்தலுக்கு எண்ணெய் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, ஹேர் க்ளென்சர் மூலம் அலசலாம்.முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும், பொடுகுத் தொல்லையை நீக்கவும், தரமான ஹேர் ஆயில்கள் சந்தையில் உள்ளன. அவற்றை சரியாக தேர்வு செய்து முறையாக பயன்படுத்தினால், முடி உதிரும் பிரச்னையில் இருந்து பாதுகாக்கலாம்.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi