சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி வரும் 30ம் தேதி ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் சிலருக்கு வீட்டு மனைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் 2013ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2019ல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவர் மீதான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் குற்றச்சாட்டு பதிவிற்காக ஐ.பெரியசாமி வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.