சென்னை: மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் வழங்குதல் முகாம்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், என்பது குறித்த செயல்விளக்க பயிற்சி சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 703 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு முகாமில் செயல்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 500 குடும்ப அட்டைகள் கொண்ட கடைக்கு ஒரு முகாம் வீதம் நடத்தப்படுகிறது. 2,500 அட்டைகள் கொண்ட கடைகளுக்கு 5 முகாம்கள் நடைபெறும்.
முகாம் நடைபெறும் இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்கவும், எலக்ட்ரானிக் பயன்பாட்டு கருவிகள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 503 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ‘லீடு பாங்க்’ கூட்டுறவு வங்கி மூலம் கணக்கு தொடங்க உதவி செய்யப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் தான் உள்ளது. ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகத்துடன் மின் கட்டண ரசீது கேட்கிறோம். ஆனால் ஆதார், ரேஷன் கார்டு மிக அவசியம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மின் கட்டண ரசீது இல்லையென்றாலும் அவர்களுக்கு உதவி செய்யப்படும். 2,300 பயோமெட்ரிக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கையிருப்பில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதார், வங்கி கணக்குடன் இணைப்பு செய்துள்ள செல்போன் எண் மூலம் பயாளிகளுக்கு உதவிட முடியும்,’’ என்றார்.