திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஒட்டபாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து அங்குள்ள வீட்டின் மேல் பகுதியில் கற்கள் விழுந்துள்ளது. இதனால் குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக வதந்தி பரவியது. இது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்தது. இதையடுத்து அவர்கள் அருகில் இருந்த கருப்பராயன் கோயிலில் இரவில் தஞ்சமடைந்து, சிறப்பு பூஜை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிரேன் உதவியுடனும், டிரோன் கேமரா மூலமாகவும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கயம் தாசில்தார் மயில்சாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.