புழல்: சென்னை சோழவரம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரானது, ஏரியின் மதகு அருகில் உள்ள கால்வாய் வழியாக நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர்.நகர் மற்றும் ராஜாங்கம் நகர் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை ஆலமரம் பகுதி வழியாக புழல் ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாயின் 2 பக்கங்களிலும் பல இடங்களில் வீடு, கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தும் கால்வாயில் கலந்துவிடுகிறது.மேலும் இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறைமுகமாக பூமிக்கு அடியில் பைப் வைத்து புழல் ஏரி கால்வாயில் விடுகின்றனர். தற்போது கால்வாயில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதாலும் தண்ணீர் மாசுபட்டு வருகிறது.
‘’இதுசம்பந்தமாக பலமுறை செங்குன்றத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே நிலைமை நீடித்தால் குடிநீர் மாசு ஏற்பட்டு புழல் ஏரி கழிவுநீராக மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உபரி கால்வாய் ஆய்வு செய்து கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.