இந்த கட்டிடம் கட்டிய பிறகே, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்று பெற்று சமர்ப்பித்தால்தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். ஆனால், இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. எனவே தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்தது.
இந்த திருத்தங்களை கடைப்பிடிக்குமாறு அனைத்து கள அதிகாரிகளுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், பல இடங்களில் ஒரே கட்டிடத்தில் தரைத்தளத்தில் கடை, மேல்தளத்தில் வீடு கட்டும்போது, கட்டிட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டருக்கு உட்பட்ட கட்டிடத்தில், வீடு மற்றும் வணிக நிறுவனம் இணைந்து இருந்தாலும், புதிய மின் இணைப்பு வழங்க கட்டிட பணி நிறைவு சான்று இனி கேட்கக்கூடாது என்று பணியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.