செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் அடுத்த விஐபி நகரில் வசித்து வருபவர் ராஜாராம் (68). வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு இதே பகுதியில் 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் ராஜாராமும் அவரது மனைவி லட்சுமியும் (58) வசித்து வருகின்றனர். மற்றொரு வீடு வாடகைக்கு விடப்படும் என பதாகை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை வாடகைக்கு கேட்பதுபோல் வந்த மர்ம நபர், லட்சுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். திடீரென லட்சுமியை கீழே தள்ளி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி உள்ளிட்ட 10 சவரன் நகையை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதில் லட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.